உலகம் பல இயற்கை அதிசயங்களை கொண்டுள்ளது. அந்த இயற்கை அதிசயங்கள் நம்மை எப்பொழுதும் ஆச்சிரியத்தை அளிப்பதற்கு தவறுவதில்லை.
பல விநோதங்களையும் ஆபத்துகளையும் ஆச்சிரியங்களையும் அற்புதங்களையும் தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் உலகின் அதிசயங்கள் தான் பாலைவனங்கள். புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனமாகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகளைக் கொண்டு பகலில் மிகுந்த வெப்பமாகவும் இரவில் அதிக குளிருடன் காணப்படும்.பாலைவனம் என்றால் நம் நினைவிற்கு வருவது சஹாரா பாலைவனம் தான். ஆனால் நம் தமிழ்நாட்டில் பாலைவனம் உள்ளதென்று சொன்னால் உங்களுக்கு சற்று அதிர்ச்சிய மாக தான் இருக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பல மர்மங்களையும் அதிசயங்களையும் கொண்ட தேரிக்காடு பாலைவனம் அமைந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல காட்சியளிக்கிறது தேரிக்காடு பாலைவனம். இந்தியாவில் எங்குமே பார்க்கமுடியாத விசித்திரமான இடமாக இந்த இடம் விளங்குகிறது. மன்னார் வளைகுடாவை தெற்கு நோக்கி தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையிலுள்ள இந்த தேரிக்காடு பாலைவனம் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரத்திலுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் தேரிக்காடு பாலைவனத்தை அதிசய பூமியாகவே கருதுகின்றனர். இந்த பாலைவனம் சிவப்பு வண்ணத்தில் சுமார் 12,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த தேரிக்காட்டின் மணல்கள் மிகவும் மிருதுவாக கற்கள் அற்று காணப்படுவதால் தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்று வீசும் போது பள்ளங்கள் மேடு போன்றும் மேடுகள் பள்ளங்கள் போன்றும் மாற்றமடைந்து தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு இருப்பதால் நமக்கு சற்று பயத்தை வரவைக்கிறது. ஏனென்றால் நாம் தனியாக செல்லும் போது எங்கும் உள்ளோம் என்று திசை அறிய முடியாமல் நம்மை திணறடிக்கும். இந்த பகுதியில் பனைமரங்கள் புட்செடிகள் காணப்படுகின்றது. பனை மரங்களைக் கொண்ட குதிரைமொழி தேரி வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. மேலும் இங்கு புதை மணல்கள் இருப்பதால் கால் அரை அடிக்கு புதைந்து விடும். இங்கு காணப்படும் மணல் பகுதி இந்த மாவட்டங்களில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதது ஆச்சரியத்தை அளிக்கிறது. இங்கு காணப்படும் மணல் ஆற்று மணலும் இல்லை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட மணலுமில்லை. அதை போல கடல் மண்ணலுமில்லை. இங்க மணல் மேடு எவ்வாறு எப்படி தோன்றியது என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை விடை அறியப்படாமல் ஒரு புதிராகவே வியப்பை அளித்து கொண்டேயுள்ளது இன்று வரை.
இந்த செம்மண்ணில் கார்னெட், இல்மெனைட், ஹெமெடைட் நிறைந்துள்ளது. கார்னெட்டில் இருந்து உருவாகும் ஹெமெடைட் கனிமத்தினால் தான் இவ்விடத்தில் உள்ள மண் சிவப்பு நிறத்திலுள்ளது. கண் எட்டும் தூரம் வரை செம்மண்ணாகவே காட்சியளிக்கிறது. பனை மரங்களும் கொல்லா மரங்களும் தேரிக்காட்டின் அழகிற்கு மேலும் அழகைக் கூட்டுகின்றன. செம்மண்ணும் பச்சை மரங்களுமாய் தேரிக்காடு சூரியக்கதிரில் தகதகவென்று காட்சியளிக்கும்
இங்கு மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல காட்சியளிக்கிறது. இவ்வாறு இருக்கும் இடத்தை தருவை என்று அழைக்கின்றனர். அகழ்வராய்ச்சியளார்கள் அங்குள்ள மணல் பகுதியை ஆய்வு செய்தபோது மூன்று அடுக்குகளாக மணல் இருப்பது ஆச்சிரியத்தை
அளிக்கிறது. ஏனென்றால் முதல் அடுக்கு 8000 ஆண்டுகளுக்கும் முந்தியதாகும், இரண்டாமடுக்கு 5000 ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாமென்றும் மேலடுக்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் தேரிக்காட்டின் மணலுக்கடியில் அக்காலத்தில் புதையுண்ட நகரங்களின் எச்சங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் தேரிக்காட்டு மணலுக்கு அடியில் இறுக்கமான செந்நிற களிமண் பூமி தென்படுவதாகவும் கருதப்படுகிறது. இப்பகுதியில் ஆய்வு நடத்திய பாதிரியார் கால்டுவெல் அங்கு மரங்கள், வயல்வெளிகள், ஏன் சில கிராமங்களைக் கூட கால சுழற்சியால் மூடியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூர் போன்றே தாமிரபரணி ஆற்று நெடுகிலும் தேரிக்காட்டிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சியின் போது சில அபூர்வமான
பொருட்கள் மற்றும் சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த தாழிகளில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் கிடைத்துள்ளன.
இந்த தேரிக்காட்டில் இன்னும் பல ஆச்சிரியங்களை கொண்டுள்ளது. அந்தப் பாலைவனத்தில் மேலப்புதுக்குடி என்ற இடத்திலுள்ள சுனையில் கோடை
காலத்தில்கூட சுவையான தண்ணீர் கிடைக்கிறது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம்
திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடைந்து விடலாம். சாகசப் பயணம் செல்ல விரும்புவர்கள் இப்பகுதிக்கு
சென்று வரலாம்.
Comments
Post a Comment